உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் முத்துராமன். இவர் எம்எஸ்எம்இ என்ற சிறுகுறு தொழில் முனைவோர் அமைப்பின் தேசிய தலைவராக இருந்து வந்தார். செயலாளராக பஞ்சாப்பை சேர்ந்த துஸ்வந்த யாதவ், தமிழ்நாடு தலைவராக நடிகை நமீதாவின் கணவர் வீரேந்திர சவுத்ரி ஆகியோர் இருந்தனர். இவர்கள் தனது பணம் ₹41 லட்சத்தை மோசடி செய்ததாக, சேலத்தைச் சேர்ந்த கோபாலசாமி என்பவர் புகார் அளித்தார்.
இப்புகாரின் அடிப்படையிலும், முத்துராமன், தனது கார், விசிட்டிங் கார்டு போன்றவற்றில் அரசின் அசோக முத்திரை மற்றும் கொடியை தவறாக பயன்படுத்தியது தொடர்பாகவும் கடந்த மாதம் 2ம் தேதி முத்துராமன், துஸ்வந்த் யாதவ் ஆகிய இருவரையும் சேலம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது தொடர்பாக நேற்று உசிலம்பட்டியில் உள்ள முத்துராமனின் வீடு, அலுவலகம், தோட்டம் ஆகிய இடங்களில் சேலம் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது வங்கி காசோலைகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை எடுத்துச்சென்றனர்.