இம்பால்: மணிப்பூரில் கிராம தன்னார்வலர்கள் இடையே பயங்கர துப்பாக்கிசண்டை நடந்தது.இதையடுத்து, பெண்கள்,முதியோர்கள், குழந்தைகள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் மெய்டீ மற்றும் குக்கி பழங்குடியினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இன மோதல்களில் 200 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடு, உடமைகளை இழந்தனர். கடந்த சில மாதங்களாக அங்கு மோதல்கள் குறைந்து இயல்பு மெல்ல,மெல்ல நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இம்பால் மேற்கு மாவட்டம், கவுட்ருக் என்ற இடத்தில் நேற்று கிராம தன்னார்வலர்கள் இடையே மோதல் உருவானது.
கவுட்ருக் கிராமத்தினர் மீது, இன்னொரு கிராமத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் திடீரென துப்பாக்கிசூடு நடத்தினர். பதிலுக்கு கவுட்ருக் கிராம தன்னார்வலர்களும் துப்பாக்கியால் சுட்டனர். துப்பாக்கி சண்டை நீடித்ததால் கிராமத்தில் இருந்த பெண்கள்,முதியவர்கள் மற்றும் குழந்தைகள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். துப்பாக்கிசூட்டில் வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு ஏராளமான பாதுகாப்பு படையினர் விரைந்துள்ளனர்.