திருவொற்றியூர்: எண்ணூரில் ரூ.1.38 கோடி வரி பாக்கி செலுத்தாத தனியார் தொழிற்சாலைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். எண்ணூர் விரைவு சாலை, காமராஜர் நகர் அருகே, ‘கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்பரேஷன் லிமிடெட்’ என்ற உரம் தயாரிக்கும் தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிறுவனத்திற்கு சொந்தமான 34 ஏக்கர் காலி நிலம் இங்குள்ளது.
இந்த நிலத்திற்கு 2013-14ம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் ரூ.1 கோடியே 37 லட்சத்து 60 ஆயிரம் நிலவரி செலுத்தாமல் நிலுவையில் உள்ளது. மாநகராட்சி வருவாய்த்துறை சார்பில் கடந்த 7 மாதங்களாக நிலுவையில் உள்ள வரியைச் செலுத்த சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு பலமுறை நினைவூட்டல் கடிதம் வழங்கப்பட்டது. கடைசியாக கடந்த 22ம் தேதி இறுதி நினைவூட்டல் கடிதம் வழங்கியும் தனியார் நிறுவனம் வரி பாக்கியை செலுத்தவில்லை.
இதனையடுத்து சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டல முதுநிலை உதவி வருவாய் அலுவலர்கள் அர்ஜூனன், சுரேஷ், லைசன்ஸ் ஆய்வாளர் ஹேமா, வரி மதிப்பீட்டாளர் சந்திரசேகர், வரி வசூல் அலுவலர் கண்ணன் ஆகியோர் நேற்று காலை தனியார் நிறுவனத்தின் கேட்டை மூடி சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டினர். உடனடியாக நிலுவையில் உள்ள வரி பாக்கியை செலுத்த வேண்டும் என்றும், தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.