சென்னை: தமிழக பெண்கள் பிச்சை எடுக்கிறார்கள் என்று நடிகை குஷ்பு பேசியதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் வலுக்கிறது. தமிழ்நாடு அரசு சார்பில் குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் பெண்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு ரூ.1000 பிச்சை போடுகிறது என்று பாஜ தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு அண்மையில் பேசியிருந்தார். குஷ்புவின் இந்த பேச்சை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. ஏராளமான பெண்கள் போராட்டத்தில் பங்கேற்று எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் குஷ்புவின் பேச்சுக்கு எதிராக தமிழகம் முழுவதும் நேற்று 3வது நாளாக போராட்டம் நடந்தது. இதில் பெண்கள், திமுக மகளிர் அணியை சார்ந்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது குஷ்புவின் உருவபொம்மையை எரித்தும், செருப்பால் அடித்தும் கோஷமிட்டனர். சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகில் நடந்த போராட்டத்தில் திமுக மகளிர் தொண்டர் அணிச் செயலாளர் நாமக்கல் ப.இராணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறுகையில், “பாஜ மத்திய செயற்குழு உறுப்பினர் குஷ்புவுக்கு மகளிர் உரிமைத்தொகை எத்தனை தாய்மார்களுக்கு வீட்டுச் செலவு, வீட்டு வாடகை, மருத்துவச் செலவு என்று பயன்படுகிறது தெரியுமா?. தமிழக மகளிரை இழிவுபடுத்தி பேசிய குஷ்புவை வன்மையாக கண்டிக்கிறோம். தமிழக மகளிர்கள் பாராளுமன்ற தேர்தலிலே திமுகவுக்கு ஆதரவாக வாக்களித்து தமிழகத்திலிருந்து பிஜேபியை விரட்டி அடித்து பாடம் புகட்டுவார்கள்” என்றனர்.
* போலீசில் புகார்
குஷ்புவுக்கு எதிராக போராட்டம் வலுத்து வரும் நிலையில், கள்ளக்குறிச்சி மற்றும் பவானி திமுக மகளிரணி சார்பில் உளுந்தூர்பேட்டை, பவானி காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ‘‘தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டமான கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் ரூ.1,000 பெறும் குடும்ப தலைவிகளை திரைப்பட நடிகையும், பாஜ நிர்வாகியுமான குஷ்பு இழிவுப்படுத்தும் வகையிலும், ஏளனமாகவும் பேசியுள்ளார். எனவே, அவர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.