Sunday, June 16, 2024
Home » இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் மேலும் 21 பேர் சென்னை வந்தனர்

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் மேலும் 21 பேர் சென்னை வந்தனர்

by Arun Kumar

மீனம்பாக்கம்: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழகத்தின் ராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளை சேர்ந்த 63 பேரில், கடந்த வாரம் 42 பேர் தமிழ்நாடு திரும்பிவிட்டனர். இலங்கையில் இந்திய தூதரக பராமரிப்பில் இருந்த மேலும் 21 தமிழக மீனவர்கள் இன்று அதிகாலை கொழும்பிலிருந்து விமானம் மூலமாக சென்னை வந்து சேர்ந்தனர். அவர்களை அரசு அதிகாரிகள் வரவேற்று, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

தமிழ்நாட்டில் ராமேஸ்வரம், மண்டபம் ஆகிய கடற்கரை பகுதிகளில் இருந்து விசைப் படகுகள் மூலம் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 64 பேரை கடந்த அக்டோபர் மாதம் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் அவர்களின் படகுகள் மற்றும் பிடித்து வைத்திருந்த மீன்களைப் பறிமுதல் செய்தனர். பின்னர் அனைவரையும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்துக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

மேலும், இதுகுறித்து ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி, இலங்கையில் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில், 64 தமிழக மீனவர்களில் ஒருவர் 2வது முறையாக கைதாகி இருப்பதால், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும் மீதமுள்ள 63 பேரை விடுதலை செய்தும் இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

63 பேருக்கும் பாஸ்போர்ட், விசா இல்லாததால், அனைவருக்கும் இந்திய தூதரகம் எமர்ஜென்சி சர்பிடிகேட் வழங்கியது. அதோடு அவர்களை தமிழ்நாட்டுக்கு அனுப்பிவைக்க விமான டிக்கெட் ஏற்பாடு செய்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 21ம் தேதி முதல் கட்டமாக 15 மீனவர்கள், 2வது கட்டமாக 22ம் தேதி 15 மீனவர்கள், 3வது கட்டமாக 24ம் தேதி 12 மீனவர்கள் என மொத்தம் 42 மீனவர்கள் விமானம் மூலமாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை அரசின் சார்பில் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, அவர்களின் சொந்த ஊரான ராமேஸ்வரம், மண்டபம் பகுதிக்கு வாகனங்களில் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், மீதமுள்ள 21 தமிழக மீனவர்கள், இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து ஏர்இந்தியா பயணிகள் விமானம் மூலமாக இன்று அதிகாலை 4.15 மணியளவில் சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தனர். அவர்களை அரசு சார்பில் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, அரசு ஏற்பாடு செய்த வாகனங்களில் சொந்த ஊரான ராமேஸ்வரத்துக்கு அனுப்பி வைத்தனர்.

You may also like

Leave a Comment

10 + ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi