Thursday, May 2, 2024
Home » மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிடுவதை தமிழ்நாடு அனைத்து நிலைகளிலும் எதிர்க்கும்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிடுவதை தமிழ்நாடு அனைத்து நிலைகளிலும் எதிர்க்கும்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

by Arun Kumar

சென்னை: மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிடுவதை தமிழ்நாடு அனைத்து நிலைகளிலும் எதிர்க்கும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். பதவிப்பிரமாணம் எடுத்த சில நாட்களுக்குள்ளாகவே அண்டை மாநிலத்தை உரசிப் பார்க்கும் காரியத்தை சிவகுமார் செய்வது ஆச்சரியமாக இருக்கிறது. மேகதாது பற்றிய முழு விவரத்தை கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு அதிகாரிகள் சொல்லியிருக்கமாட்டார்கள் என்று கருதுகிறேன்.

மேகதாதுவோ அல்லது அனுமதிக்கப்படாத கட்டுமானங்களோ தமிழ்நாட்டின் நலனை பாதிக்கும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்றும் அதற்காக 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும் கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்ததாக இன்று காலை பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளது.

பெரும் போராட்டத்திற்கு பிறகு வெற்றி பெற்றிருக்கிற சிவக்குமார் மக்களின் வாழ்த்துக்களை பெறுவதில் பரபரப்பாக சுழன்று கொண்டிருப்பதால், கொஞ்சம் நிதானித்து நேரில் வந்து வாழ்த்து கூறலாம் என்று நினைத்திருந்தேன். இருப்பினும் இந்த அறிக்கையின் வாயிலாக முதற்கண் என்னுடைய வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

சிவக்குமார் பதவிப் பிரமானம் எடுத்த சில நாட்களுக்குள்ளாகவே அண்டை மாநிலத்தை உரசிப் பார்க்கிற காரியத்தை செய்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மேகதாது பற்றிய முழு விவரத்தை அதிகாரிகள் இன்னும் அவருக்கு சொல்லியிருக்க மாட்டார்கள் என்று கருதுகிறேன்.

காவிரிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளில் மேகதாது பற்றி குறிப்பிடப்படவில்லை. மேகதாதுவோ அல்லது அனுமதிக்கப்படாத கட்டுமானங்களோ தமிழ்நாட்டின் நலனை பாதிக்கும். எனவே, தமிழ்நாட்டிற்கு உரிமையுள்ள கட்டுப்பாடற்ற நீர்பிடிப்புப் பகுதியில் (uncontrolled intermediate catchment) மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கூறுவது வரவேற்கத்தக்கதல்ல என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடுவதை தமிழ்நாடு அனைத்து நிலைகளிலும் எதிர்க்கும் என்றும் விரைவில் தங்களை நேரில் சந்திக்கின்ற வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்றும் அப்போது இந்த பிரச்சினையை பற்றி விரிவாக பேசலாம் என்று கருதுகிறேன். கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் அதுவரை பொறுமை காப்பார் என நினைக்கிறேன் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

two + 18 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi