நியூயார்க்: ‘கூகுள் நிறுவனத்தில் இந்த ஆண்டும் பணி நீக்கங்கள் தொடரும்’ என சுந்தர் பிச்சை அறிவித்திருப்பது ஐடி துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகின் முன்னணி பன்னாட்டு நிறுவனங்களில் ஒன்றான கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் சிஇஓ சுந்தர் பிச்சை, அந்நிறுவன ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘நிறுவனத்தின் செயல்பாட்டை எளிதாக்குவதற்கான சில அடுக்குகளை நீக்க வேண்டியது காலத்தின் அவசியமாகிறது. எனவே இந்த ஆண்டும் பணி நீக்கங்களை எதிர்பார்க்கலாம். ஆனால் அது கடந்த ஆண்டைப் போல் அதிகளவில் இருக்காது. அதோடு அனைத்து துறையிலும் இருக்காது’ என கூறி உள்ளார்.
கடந்த 2023ல் ஆல்பாபெட் நிறுவனம் 12,000 ஊழியர்களை, அதாவது தனது மொத்த ஊழியர்களில் 6 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்தது. 2024ம் ஆண்டு தொடங்கி இன்னும் ஒரு மாதம் கூட முடிவடையாத நிலையில், கூகுள், அமேசான் போன்ற பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் 7,500 ஊழியர்களுக்கு பணி நீக்க உத்தரவுகளை அனுப்பியிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பணி நீக்க நடவடிக்கைகளுக்கு மத்தியில் சுந்தர் பிச்சையின் அறிவிப்பு வந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வரவால் பல வேலைவாய்ப்புகளுக்கு வேட்டு வைக்கப்படும் நிலையில், மிகப்பெரிய கூகுள் நிறுவனமே ஆட்குறைப்பு செய்வது ஐடி ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.