ஊட்டி: கோடை சீசனுக்காக அனைத்து பூங்காக்களும் தயார் செய்யப்பட்டு வரும் நிலையில், ஊட்டி மரவியல் பூங்கா பராமரிப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கின்றனர். ஆனால், கோடை காலத்தில் சுற்றுலா பயணிகள் வருகை பலமடங்கு அதிகரிக்கும். நீலகிரிக்கு வெளிமாநிலம் மட்டுமின்றி, தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து ஊட்டியில் உள்ள இயற்கை அழகையும், தாவரவியல் பூங்கா,தொட்டபெட்டா, படகு இல்லம், ரோஜா பூங்கா ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.
இந்த நிலையில், சுற்றுலா பயணிகள் கூடுதலாக ஒரு சுற்றுலா தலம் கண்டு ரசிக்கும் வகையில் கடந்த சில ஆண்டுக்கு முன்பு ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே ஊட்டி ஏரியின் மறு கரையில் மரவியல் பூங்கா அமைக்கப்பட்டது. இங்கு பல்வேறு வகையான மலர் செடிகள் வைக்கப்பட்டுள்ளது. பெரிய புல் மைதானமும் அமைக்கப்பட்டு உள்ளது. கோடை சீசன் நெருங்கிய நிலையில், தற்போது பூங்காவில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.