Thursday, May 16, 2024
Home » சூலூர் அருகே சமையல் தொழிலாளி அடித்துக்கொலை

சூலூர் அருகே சமையல் தொழிலாளி அடித்துக்கொலை

by Lakshmipathi

சூலூர் : கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கலங்கல் காவேரி நகர் பகுதியில் ஜெயசந்திரன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இவரது தோட்டத்தில் உள்ள குடிசை வீட்டை கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் வாடகைக்கு எடுத்துள்ளார். அதில் விசேஷங்களுக்கு சமையல் செய்து சப்ளை செய்து வருகிறார். விக்னேசிடம் 10க்கும் மேற்பட்ட நபர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

நேற்று இரவு குடிசை வீட்டில் தங்கி இருந்தவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. மது மற்றும் கஞ்சா போதையில் இருந்த ஒருவருக்கொருவர் நேற்று இரவு பயங்கரமாக தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. தகராறின்போது அறையில் இருந்த சேர் மற்றும் சோபா, பைப்புகளை கொண்டு ஒருவருக்கு ஒருவர் பயங்கரமாக தாக்கிக் கொண்டனர். இதில் மதுரையைச் சேர்ந்த ராஜ் (40) என்பவர் பலத்த காயமடைந்து கீழே விழுந்துள்ளார். தொடர்ந்து அவரை கூர்மையான ஆயுதங்களால் உடன் இருந்த நண்பர்கள் வெட்டியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த அவரை நேற்று அதிகாலை சூலூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக சூலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து ராஜியை தாக்கியதாக உடன் இருந்த 2 பேரை சமையல் காண்ட்ராக்டர் விக்னேஷ் பிடித்து வந்து சூலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

விசாரணையில் அவரகள் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சுஜித் (37), ரமேஷ் (35) என தெரியவந்தது. அறையில் தங்கி இருந்தவர்கள் 7 பேர் பல்லடத்தில் நடைபெற உள்ள பாஜ கூட்டத்திற்கு உணவு சப்ளைக்கு சென்று இருப்பதாகவும், அவர்கள் வந்த பின்னர்தான் சம்பவம் தொடர்பான முழு தகவல் தெரியவரும். இந்நிலையில் பிரதமர் மோடி வருகை தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்த சூலூர் காவல் ஆய்வாளர் மாதைய்யன் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சோதனை நடத்தினார்.

இதில் கொலையாளி சுஜித் கேரளாவில் கஞ்சா வியாபாரி என்பதும், அவர் மீது கொலை முயற்சி, ஆள் கடத்தல் போன்ற 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இவர் 2017ம் ஆண்டு கேரள போலீசாரால் குண்டாசில் கைது செய்யப்பட்டவர். இது தொடர்பான வழக்கு கட்டுகளை அவரது பையில் இருந்து போலீசார் கைப்பற்றினர். இவர் கேரளாவில் ரவுடிகள் பட்டியலில் தேடப்படும் குற்றவாளி ஆவார்.
தொடர்ந்து பிடிபட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

2 + 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi