திருவள்ளூர்: திருவள்ளூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் நிறைய உள்ளன. இதனால் திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மாணவர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். அதன்படி திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து செங்குன்றம் நோக்கி செல்லும் தடம் எண் 505 பேருந்தில் நேற்று மாலை 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏறினர். அவர்கள், திருவள்ளூர் அடுத்த ஈக்காடு வரை ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர். மேலும் அவர்கள், பயணிகளை அச்சுறுத்தும் வகையில் ரகளையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகியோர் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலக ரகசிய வாட்ஸ்அப் எண்ணில் வீடியோ காட்சி மூலமாக புகார் அளித்தனர். மாணவர்களை ஓட்டுனர், நடத்துனர் கண்டித்தும் கண்டுகொள்ளவில்லை. மாறாக, தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. அதில் சில மாணவர்கள் போதையில் ரகளையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்களை அந்தந்த பள்ளி நிர்வாகம் கண்டிக்க வேண்டும். காவல்துறை, பற்றி நிர்வாகம் மற்றும் பெற்றோர் அறிவுரை கூறி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.