சென்னை: போதைப் பொருள் கடத்தலுக்கு உறுதுணையாக செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.22 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல், கோவையில் மருந்து குப்பிக்குள் வைத்து போதை மாத்திரைகள் விற்பனை, கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்கப்படும் போதை ஊசிகள் என போதைப்பொருட்களின் பெருக்கம் கண்டனத்திற்குரியது.
போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கில் தொடங்கி, போதைப் பொருள் கடத்தல் விற்பனையில் தொடர்பிருப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவரின் உதவியாளராகவும் அவருக்கு நெருக்கமாக இருந்தவரும் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
போதைப் பொருட்கள் புழக்கத்தை அடியோடு அழித்தொழிப்பதோடு, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பாரபட்சம் பார்க்காமல் போதைப் பொருள் கடத்தலுக்கு உறுதுணையாக செயல்படுவோர் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.