Sunday, October 6, 2024
Home » இனியேனும் உணருமா?

இனியேனும் உணருமா?

by Ranjith

இந்தியாவில் பொருளாதார குற்றங்களையும், அந்நியச் செலாவணி மோசடிகளையும் தடுக்கும் நோக்கத்தில் கடந்த 1956ம் ஆண்டு உருவாக்கப்பட்டது தான் அமலாக்கத்துறை. இந்த துறையானது ஒன்றிய நிதி அமைச்சகத்தின் வருவாய் பிரிவின் கீழ் இயங்குகிறது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச்சட்டம் (2002), அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் (1999), தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சட்டம்(2018),அந்நிய செலாவணி ஒழுங்கு முறைச்சட்டம் (1973), காபிபோசா சட்டம்(1974) என்று 5 பொருளாதார குற்றத்தடுப்பு சட்டங்களை இந்த துறை அமல்படுத்துகிறது. இதற்காக சம்மன் அனுப்புதல், சோதனையிடுதல், சொத்துகளை முடக்குதல், சொத்துகளை பறிமுதல் செய்தல், கைது செய்தல் போன்ற அதிகாரங்கள் இந்த துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறையின் தலைமை அலுவலகம் டெல்லியில் உள்ள நிலையில் நாடு முழுவதும் 5 இடங்களில் கிளை அலுவலகங்களை கொண்டுள்ளது. இந்த வகையில் சென்னை, மும்பை, சண்டிகர், ெகால்கத்தா மற்றும் டெல்லியில் அமலாக்கத்துறை இயக்குநரகங்கள் செயல்பட்டு வருகின்றன. இப்படி தனித்துவம் வாய்ந்த அமலாக்கத்துறை சமீபகாலமாக ஒன்றிய அரசின் ஏவல்துறையாக மாறி நிற்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் எதிர்க்கட்சிகளை மிரட்டி ஒடுக்கும் பணியை இது செய்து வருகிறது என்ற சர்ச்சை நாடு முழுவதும் பரவலாகியுள்ளது.

தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது, மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், அவரது உறவினர் அஜித்பவார் மீது வழக்குகள், பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித்சிங் சன்னி அறிவிக்கப்பட்டவுடன் அவர் மீது மணல் குவாரி வழக்கு என்று இதற்கான ஆதாரங்களை அடுக்கிக் கொண்டே போகின்றனர் அரசியல் நோக்கர்கள். இப்படி எதிர்க்கட்சிகள் மீது அத்துமீறி ஏவப்படும் அமலாக்கத்துறை ஒரு அழுக்கு படிந்த துறையாக தற்போது மாறி நிற்கிறது.

திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ்பாபுவை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு ஒன்றிலிருந்து விடுவிக்க ரூ.3 கோடி பேரம் பேசியுள்ளார், மதுரை தபால்தந்தி நகரிலுள்ள அமலாக்கத்துறை உதவி மண்டல அலுவலகத்தில் ஆய்வாளராக பணியாற்றும் அங்கிட்திவாரி. இது தொடர்பாக தொடர்ந்து மிரட்டல் விடுத்த நிலையில் இறுதியாக ரூ.51 லட்சம் தந்ேத ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் சுரேஷ்பாபு. இதில் ரூ.20 லட்சம் கொடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் பணம் கேட்டு நச்சரித்துள்ளார் அங்கிட் திவாரி.

இந்த குடைச்சலால் மனஉளைச்சலில் தவித்த சுரேஷ்பாபு, நேற்றுமுன்தினம் (1ம்தேதி) இது குறித்து விஜிலென்ஸ் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து சினிமாவை மிஞ்சும் சாகசங்களை கடந்து அங்கிட் திவாரியை பொறி வைத்து பிடித்துள்ளனர் விஜிலென்ஸ் போலீசார். தற்போது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக விஜிலென்ஸ் போலீசார், விடிய விடிய சோதனை நடத்தும் அளவுக்கு காட்சிகள் மாறியுள்ளது. அரிச்சந்திரர்கள் போல் பேசிய அமலாக்கத்துறை அதிகாரிகளின் குட்டும் அம்பலமாகியுள்ளது. காலம் ஒரு ரப்பர் பந்து. அதிகாரம் என்ற பெயரில் நாம், திட்டமிட்டு அதை மேலே தூக்கிபோட்டு அதகளம் செய்தால்… மீண்டும் அது நம்மிடமே திரும்பி வரும். ஒன்றிய அமலாக்கத்துறை இனியேனும் இதை உணருமா என்பது பெரும் கேள்வியாக மாறி நிற்கிறது.

You may also like

Leave a Comment

six − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi