விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள மேட்டு தெரு பகுதியை சேர்ந்தவர் சந்திரபாபு. இவரது மகன் கார்த்திக் (21). இவர், திண்டிவனம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி ஜூவாலஜி 3ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கார்த்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு ஐ அம் வெயிட்டிங் ஃபார் மை டெத் என வாட்ஸ் அப் எண்ணில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.
இதேபோன்று இவர் பலமுறை ஸ்டேட்டஸ் வைத்ததாக கூறப்படுகிறது. அதனால் இதனை பார்த்த இவரது நண்பர்கள் மற்றும் பெற்றோர்கள் இதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. மேலும் மாணவன் கார்த்திக் காதல் தோல்வியால் தான் இதுபோன்று ஸ்டேட்டஸ் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு ஸ்டேட்டஸ் வைத்த பிறகு அவர் வீட்டில் வழக்கம் போல் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றைய தினம் நீண்ட நேரமாகியும் கார்த்திக்கை காணவில்லை. இதையடுத்து வீட்டின் அருகே சுமார் 300 மீட்டர் இடைவெளியில் உள்ள கிணற்றில் கார்த்திக் தற்கொலை செய்து கொண்டதாக பெரியதச்சூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பெரிய தச்சூர் காவல் நிலைய போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு, மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.