பெங்களூரு: காங்கிரஸ் எம்.பியும், துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் சகோதரருமான டி.கே.சுரேஷ், தென் மாநிலங்களுக்கு நிதிப்பகிர்வில் ஒன்றிய பாஜ அரசு வஞ்சித்தால், தென் மாநிலங்கள் தனி நாடு கோரிக்கை எழுப்ப நேரிடும் என்று பேசியிருந்தார். இந்நிலையில், பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதிக்குழு பரிந்துரையை செயல்படுத்துவதைத் தவிர ஒன்றிய அரசால் வேறு எதுவும் செய்ய முடியாது. மாநிலங்கள் நிதிக்குழுவுடன் அமர்ந்து பேசி, தங்களுக்கான நிதியுதவியை கேட்டுப்பெற வேண்டும்.
தென் மாநிலங்கள் என்று பிரித்து பார்க்கவே நான் விரும்பவில்லை. ஒவ்வொரு மாநிலத்திற்கும் அவற்றிற்கேற்ப உரிய தனித்தனி பலங்கள் உள்ளன. எனவே தென் மாநிலங்களை இணைத்து தனி நாடு என்று பேசுவது அபாயகரமானது. நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் என்ற பொறுப்பான பதவியில் இருப்பவரும், கர்நாடக மாநில துணை முதல்வரின் சகோதரருமான டி.கே.சுரேஷ், தென் மாநிலங்களை இணைத்து தனி நாடு கோரிக்கை விடுக்கிறார். நான் அதில் உடன்படவில்லை என்றார்.