கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட சயான் கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் நாளை ஆஜராகிறார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவம் தொடர்பாக ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். தற்போது அவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியில் உள்ளனர். இந்த வழக்கினை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
மேலும், இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ள பிஜின் குட்டி, தீபு, ஜம்சீர் ஆகியோரிடம் இருந்து 8 செல்போன்கள், 4 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. செல்போன்கள், சிம்கார்டுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் 8,000 பக்கங்கள் உதகை மாவட்ட குடும்பநல நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சயானிடம் விசாரணை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனா். இதற்காக அவருக்கு அழைப்பாணையும் அனுப்பப்பட்டுள்ளது. அதில், வரும் 11-ஆம் தேதி கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சயான் நாளை விசாரணைக்காக கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகவுள்ளார்.