
காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த செல்லதுரைக்கு சொந்தமான விசைப்படகில் காரைக்காலை சேர்ந்த 12 மீனவர்கள், நேற்று முன்தினம் நள்ளிரவு கோடியக்கரை அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், படகை சுற்றி வளைத்து மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி, படகில் இருந்த ₹5லட்சம் மதிப்பிலான பொருட்களை அள்ளி சென்றுள்ளனர். இதில் நிவாஷ், கார்த்தி, மெதித், சிவகுரு, அஜீத் ஆகிய 5 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்திய கடலோர காவல் படையினர் வந்து, மீனவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்ததோடு காரைக்கால் துறைமுகத்திற்கு நேற்று மாலை அழைத்து வந்தனர்.