பெங்களூரு: காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி தற்போது உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி மக்களவை தொகுதி உறுப்பினராக உள்ளார். முதுமை மற்றும் உடல் நிலை கருத்தில் கொண்டு வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட அவர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவையில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒன்றிய தகவல் மற்றும் உயிரி தொழில்நுட்ப துறை அமைச்சர் ராஜீவ்சந்திரசேகர், சையத் நாசீர் உசேன், ஜி.சி.சந்திரசேகர் மற்றும் டாக்டர் எல்.அனுமந்தையா ஆகியோர் பதவி காலம் வரும் 2024 ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிகிறது.
இதில் காங்கிரஸ் மூன்று இடங்களில் வெற்றி பெறும். இந்நிலையில் சோனியாகாந்தி நாடாளுமன்றத்தில் உறுப்பினராக சிரமம் இல்லாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவரை அடுத்தாண்டு மாநில சட்டப்பேரவையில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்க முதல்வர் சித்தராமையா, துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் முடிவு செய்துள்ளதாகவும் கடந்த 17 மற்றும் 18 ஆகிய இரு நாட்கள் பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த சோனியாகாந்தியிடம் இந்த தகவலை தெரிவித்தாக நம்பத்தகுந்த வட்டாரம் மூலம் தெரியவருகிறது.