திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே காதலர்களை கட்டிப் போட்டு விட்டு சகோதரிகளை கத்தி முனையில் மிரட்டி பலாத்காரம் செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பிய ஒருவரை தேடி வருகின்றனர். திண்டுக்கல் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு 19, 17, 13 வயதில் 3 மகள்கள் உள்ளனர். இதில் 19 வயது இளம்பெண்ணுக்கு திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர்களில் 19, 17 வயது சகோதரிகள் அதே பகுதியை சேர்ந்த 2 வாலிபர்களை காதலித்து வந்துள்ளனர்.
கடந்த மார்ச் 30ம் தேதி சகோதரிகள் தங்களது காதலர்களுடன் ஒரு கோயில் திருவிழாவுக்கு சென்று விட்டு அங்குள்ள ஓட்டலில் சாப்பிட்டு விட்டு சாலையோரம் நின்று கொண்டு இருந்தனர். அப்போது டூவீலர்களில் வந்த மீனாட்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த சரண்குமார் (21), முத்தழகுபட்டியை சேர்ந்த வினோத்குமார் (26), முருகபவனத்தை சேர்ந்த சூரியபிரகாஷ் (22) ஆகியோர், சகோதரிகளிடம், ‘‘எதற்காக இங்கு வந்தீர்கள்? யாருடன் வந்தீர்கள்’’ என கேட்டுள்ளனர். ஓட்டலில் சாப்பிட்ட பில் தொகையை கொடுத்து விட்டு வெளியே வந்த காதலர்கள் அவர்களிடம் தங்களுடன் வந்ததாக கூறியுள்ளனர்.
பின்னர் அவர்கள் 3 பேரும் சுள்ளான் என்ற பிரசன்ன குமார் (25) என்பவருக்கு போன் செய்து தகவல் தெரிவித்து விட்டு, காதலர்களை ஒரு டூவீலரிலும், சகோதரிகளை மற்றொரு டூவீலரிலும் ஏற்றி கொண்டு திண்டுக்கல் தாமரைக்குளம் பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு வந்தவுடன் காதலர்கள் இருவரையும் கயிற்றால் கட்டி போட்டனர். அந்த இடத்துக்கு பிரசன்னகுமாரும் வந்து விடவே 4 பேரும் சேர்ந்து கத்திமுனையில் மிரட்டி, சகோதரிகளை இரவு முழுவதும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து விட்டு அங்கிருந்து தப்பி விட்டனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சகோதரிகள் அளித்த புகாரின் பேரில் சாணார்பட்டி மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து சரண்குமார், வினோத்குமார், சூரியபிரகாஷ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள பிரசன்னகுமாரை தேடி வருகின்றனர். பிரசன்ன குமார், சரண்குமார் மீது திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி, அடிதடி போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.