சென்னை: தமிழ்நாட்டில் 5 இடங்களில் அதி கனமழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சீர்காழி, சிதம்பரம், வேளாங்கண்ணி, திருவாரூர், நாகையில் அதிகனமழை பெய்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம், கடலூர் மாவட்டம் புவனகிரியில் தலா 19 செ.மீ. மழை பெய்துள்ளது.
தமிழ்நாட்டில் 17 இடங்களில் மிக கனமழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கொள்ளிடம், புவனகிரி, மீனம்பாக்கம், நன்னிலம், சேத்தியாத்தோப்பு, கடலூர் அண்ணாமலை நகரில் மிக கனமழை பதிவானது. நாகை மாவட்டம் திருப்பூண்டி, காட்டுமன்னார்கோவில், குடவாசல், மரக்காணத்தில் மிக கனமழை பதிவானது. கொத்தவாச்சேரி, லால்பேட்டை, வானூர், கடலூரில் மிக கனமழை பதிவாகி உள்ளது. நன்னிலத்தில் 17செ.மீ., சேத்தியாதோப்பு, சிதம்பரம் அண்ணாமலை நகர் 15செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று 56 இடங்களில் கனமழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 24செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. சீர்காழிக்கு அடுத்தபடியாக சிதம்பரத்தில் 23செ.மீ. மழை பெய்துள்ளது. வேளாங்கண்ணியில் 22செ.மீ., திருவாரூர், நாகையில் தலா 21செ.மீ. மழை பெய்துள்ளது.