கோவையில் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கோவை பாராளுமன்ற தொகுதியில் மும்முனை போட்டி என்பது எல்லோரும் பொதுவாக சொல்கிற வார்த்தை. ஆனால், உண்மை என்னவென்றால், எங்களுக்கு நாங்களேதான் போட்டி. இதற்கு முன்பு பெற்ற வெற்றியை பின்தள்ளிவிட்டு, இப்போது எவ்வளவு பெரிய வெற்றியை பெறப்போகிறோம் என்பதுதான். அந்த போட்டி. காரணம், தமிழகத்தில் கடந்த 3 ஆண்டு காலத்தில் முதல்வர்.மு.க.ஸ்டாலின் வழங்கிய திட்டங்கள் அத்தனை பிரிவு மக்களையும் சென்றடைந்தள்ளது.
குறிப்பாக பெண்கள், அதிகளவு பயன் பெற்றுள்ளனர். அதனால், மகளிர் துணையுடன் இம்முறை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் மகத்தான வெற்றியை பெற காத்திருக்கிறார்கள். எதிரணியினர் நிச்சயமாக டெபாசிட் இழப்பார்கள். முன்னாள் அமைச்சர் அண்ணன் செந்தில் பாலாஜி தேர்தல் களத்தில்தான் இருக்கிறார். விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார். நேரடியாக களத்தில் இறங்கி, பணியாற்றுவார். இவ்வாறு கூறினார்.