சென்னை: சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அவரை இன்று ஆஜர்படுத்துமாறு போலீசுக்கு உத்தரவிட்டிருந்தது. 2023 ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கில் ஜனவரி 22ம் தேதி குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்ய தேதி நிர்ணயிக்கப்பட்ட நிலையில், போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளின் விசாரணை முடியும்வரை, அமலாக்கத் துறை தாக்கல் செய்த இந்த வழக்கின் விசாரணையை தொடங்க கூடாது என்றும், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் அவரது வழக்கறிஞர் என்.பரணிகுமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘மத்திய குற்றப்பிரிவு வழக்கில் செந்தில் பாலாஜி விடுவிக்கப்படும் பட்சத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்ததே செல்லாததாகிவிடும்’ என்றார்.இதற்கு அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், குற்றச்சாட்டுகள் பதிவுக்காக செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.
இந்நிலையில், செந்தில் பாலாஜியை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி அவரது சார்பில் வழக்கறிஞர் என்.பரணிகுமார் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு பதிவாளரிடம் நம்பரிடப்படாத சூழலில் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கவுதமன் நீதிபதி அல்லி முன்பு ஆஜராகி, செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி மனு தாக்கல் செய்துள்ளோம். அந்த மனுவை பட்டியலிடுமாறு, அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரினார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி அல்லி, வழக்கிலிருந்து விடுவிக்ககோரிய மனு மீது விசாரணை நடத்தப்படும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் மீதான குற்றச்சாட்டுகள் பதிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, செந்தில் பாலாஜி காணொலி காட்சி மூலம் புழல் சிறையில் இருந்து நேற்று மதியம் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, அவரின் நீதிமன்ற காவலை பிப்ரவரி 20ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.