Sunday, June 16, 2024
Home » குட்டி ஜப்பான் சிவகாசியில் பள்ளி, கல்லூரி நோட்டுகள் தயாரிப்பு பணி ஜரூர்

குட்டி ஜப்பான் சிவகாசியில் பள்ளி, கல்லூரி நோட்டுகள் தயாரிப்பு பணி ஜரூர்

by Neethimaan

* கண்ணைக் கவரும் கலர், கலர் ரேப்பர்கள்
* உள்ளம் கொள்ளை கொள்ளும் டிஜிட்டல் டிசைன்கள்
* இந்தாண்டு 25 சதவீதம் வரை விலை உயரும்

சிவகாசி: அடுத்த மாதம் பள்ளி, கல்லூரிகள் திறக்க உள்ள நிலையில், மாணவர்களுக்கு தேவையான நோட்டுகள் தயாரிக்கும் பணி சிவகாசியில் தீவிரமாக நடந்து வருகிறது. கண்ணைக் கவரும் கலர், கலர் ரேப்பர்களுடன் பல ரகங்களில் நோட்டுகள் தயாராகின்றன. மூலப்பொருள் விலை உயர்வால் இந்தாண்டு 25 சதவீதம் வரை விலை உயரும் என தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி குட்டி ஜப்பான் என அழைக்கப்படுகிறது. இங்கு பட்டாசு, தீப்பெட்டி தொழிலுக்கு அடுத்தபடியாக அச்சத் தொழில் புகழ் பெற்றது. இந்த தொழிலில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு ஆண்டுதோறும் ரூ.100 கோடிக்கு நோட்டுப் புத்தக வர்த்தகம் நடக்கிறது. தற்போது சிவகாசியில் இந்த கல்வி ஆண்டுக்கான பள்ளி, கல்லூரி நோட்டுகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகின்றது.

நகரில் உள்ள அச்சகங்களில் பள்ளி பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் தயாரிக்கும் பணி கடந்த 4 மாதமாக தீவிரமாக நடந்து வருகின்றது. நோட்டுகள் தரம் மிகுந்தவையாக இருப்பதால் தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள், நோட்டுகளை அரசே இலவசமாக வழங்கி வருகிறது. ஆனால், தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்களுக்கு தேவையான நோட்டுகளை கடைகளில் வாங்குகின்றனர்.

இதில், பெரும்பாலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிக்கும்போதே, நோட்டுகளுக்கான கட்டணத்தையும் சேர்த்து வாங்கி, தாங்களே நோட்டுகளையும் வழங்கி வருகின்றன. இதனால், கல்வி நிறுவனங்கள் சிவகாசியில் உள்ள அச்சகங்களுக்கு நேரடியாக வந்து, தங்களுக்கு தேவையான நோட்டுகளை ஆர்டர் கொடுத்து வாங்கிச் செல்கின்றனர். நகரில் உள்ள பிரபல அச்சகங்களில் நோட்டுகள் தயாரிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. நோட்டுகளின் அட்டைகள் உறுதியாகவும் நல்ல தரத்துடன் இருப்பதால் நல்ல வரவேற்பு உள்ளது.

கண்ணைக் கவரும் இயற்கை காட்சிகள்
நோட்டுகளின் முகப்பு அட்டைகளில் உலகத்தின் சிறப்பு வாய்ந்த இடங்கள், இயற்கைக் காட்சிகள், புகழ் பெற்ற இடங்கள், வண்ண மலர்கள், காட்டு விலங்குகள் மற்றும் டிஜிட்டல் டிசைன்கள் என கண்ணை கவரும் வகையில் அச்சிடப்படுகின்றன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நோட்டுகள் தயாரிக்கப் பயன்படும் தாள்களின் விலை உயர்வாலும், மூலப் பொருட்களின் விலை உயர்வாலும் இந்த ஆண்டு நோட்டுகளின் விலை 20 சதவிகிதம் முதல் 25 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். இந்த கல்வி ஆண்டிற்கு தேவையான நோட்டுகளை தயாரித்து கல்வி நிறுவனங்களும், விற்பனையாளர்களுக்கும் அனுப்பும் பணியில் அச்சகங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நோட்டுகளில் பல ரகங்கள்…
அச்சகங்களில் கோடு போட்ட நோட்டு, கோடு போடாத நோட்டு, இரட்டைக் கோடு மற்றும் நான்கு கோடு நோட்டு, கணக்கு நோட்டு, அக்கவுண்டன்சி நோட்டு, பிராக்டிகல் நோட்டு, லாங்க் சைஸ் நோட்டு, 40 பக்கம், 80 பக்கம், 120 பக்கம், ஒரு குயர், இரண்டு குயர் என பல ரகங்களில் நோட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.

You may also like

Leave a Comment

twenty − 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi