Wednesday, May 15, 2024
Home » புடவை தருவதாக அழைத்து வந்து ஏமாற்றினர் அதிமுக கூட்ட மேடையில் அமர்ந்து பெண்கள் போராட்டம்: வேதாரண்யத்தில் பரபரப்பு

புடவை தருவதாக அழைத்து வந்து ஏமாற்றினர் அதிமுக கூட்ட மேடையில் அமர்ந்து பெண்கள் போராட்டம்: வேதாரண்யத்தில் பரபரப்பு

by Arun Kumar

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் புடவை தருவதாக அழைத்து வந்து ஏமாற்றியதால், பெண்கள் அதிமுக பொதுக்கூட்ட மேடையில் அமர்ந்து போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. நாகை மாவட்டம் வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் பங்கேற்றால் புடவை வழங்கப்படும் என்று கூறி டோக்கன் வழங்கி வேனில் பெண்களை அதிமுகவினர் அழைத்து வந்திருந்தனர். இரவு 7 மணிக்கு துவங்கிய பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் எம்எல்ஏவுமான ஓ.எஸ்.மணியன் பேசினார். இரவு 11 மணியளவில் கூட்டம் முடிந்ததும் பெண்களுக்கு புடவைகளை ஓ.எஸ்.மணியன் வழங்கினார்.

இதனால் 4 மணி நேரம் காத்திருந்த பெண்கள் முண்டியடித்து கொண்டு புடவைகளை வாங்க ஆரம்பித்தனர். அப்போது கூட்ட மேடையில் நெரிசல் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த அதிமுக நிர்வாகிகள், புடவை வழங்குவதை பாதியிலேயே நிறுத்தினர். இதனால் புடவை வாங்காத பெண்கள், பொதுக்கூட்ட மேடையிலேயே அமர்ந்து போராட்டம் நடத்தினர். ஆனாலும் மீதமுள்ள புடவைகளை பெண்களுக்கு கொடுக்காமல் அதிமுகவினர் எடுத்து சென்று விட்டனர். சிறிது நேர போராட்டத்துக்கு பின், நூற்றுக்கணக்கான பெண்கள் புடவை வாங்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

You may also like

Leave a Comment

four × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi