*நிபுணர்கள் குழுவினர் நடவடிக்கை
சமயபுரம் : சமயபுரம் போலீசார் பறிமுதல் செய்த இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் நேற்று நிபுணர்கள் செயலிழக்க வைத்தனர்.சமயபுரம் பகுதியில் கடந்த 2023ம் ஆண்டு நாட்டு ரக வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்த சில நபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2 நாட்டு ரக வெடி குண்டுகள் சமயபுரம் காவல் நிலையத்தில் ஒரு ஆண்டாக பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நாட்டு வெடிகுண்டுகளை செயலிழக்க செய்ய நீதிமன்றம் அண்மையில் அனுமதி அளித்தது.இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மிதுன்குமார் தலைமையில், இந்த வெடி குண்டுகள் சமயபுரம் அருகேயுள்ள இனாம் கல்பாளையம் பகுதியில் ஜேசிபி எந்திரம் மூலம் பெரிய குழி தோண்டி பொதுமக்கள் மற்றும் விலங்குகளுக்கு இடையூறு இல்லாதபடி வெடிகுண்டு நிபுணர் ஆய்வாளர் எட்வர்ட், தலைமை காவலர் தனசேகர் உள்ளிட்ட குழுவினர் குழியில் புதைத்து வெடிக்கச் செய்து செயலிழக்க வைத்தனர்.
இதில் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறிய துகள்களின் மாதிரிகளை வெடிகுண்டு நிபுணர் ஆய்வாளர் எட்வர்ட் தலைமையில் நிபுணர் குழுவினர் பரிசோதனைக்காக எடுத்து சென்றனர். அப்போது சமயபுரம் இன்ஸ்பெக்டர் மிதுன்குமார், உதவி ஆய்வாளர் ராஜ்சேகரன், தீயணைப்புத் துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் உடனிருந்தனர்.