*தொடர்ந்து கூடுதல் விலைக்கு விற்பனை
பொள்ளாச்சி : பொள்ளாச்சி காந்தி மார்கெட்டில் வாரத்தில் 2 நாட்கள் நடக்கும் வாழைத்தார் மொத்த விற்பனையின்போது, சுற்று வட்டார கிராமங்களில் இருந்தும் உடுமலை, கணியூர் மற்றும் தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வாழைத்தார்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இதில், கடந்த மாதத்தில் சுபமுகூர்த்த நாட்கள் அடுத்தடுத்து இருந்ததால், மார்கெட்டுக்கு வாழைத்தார் வரத்து அதிகமாக இருந்ததுடன், சில வாரமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. ஆனால் இந்த மாதம் துவக்கத்திலிருந்து சுற்று வட்டார கிராம பகுதியிலிருந்தே ஓரளவு வாழைத்தார் வரத்து இருந்தது.
தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை மற்றும் பனி காரணமாக வாழைத்தார் அறுவடை சற்று குறைந்தது. இந்த வாரத்தில் நேற்று நடந்த சந்தை நாளின்போதும் வெளியூர் வாழைத்தார் வரத்து குறைவாக இருந்தது. தற்போது விசேஷ நாட்கள் குறைவாக இருந்தாலும், சபரிமலை சீசன் என்பதால் அம்மாநிலத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வியாபாரிகள் பலர் நேரடியாக வந்து, குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்து வாங்கி செல்கின்றனர்.
நேற்று நடந்த சந்தை நாளில் வாழைத்தார்கள் ஓரளவு வர பெற்றாலும், அதில் சுமார் 75 சதவீதம் கேரள மாநில பகுதிக்கே அனுப்பி வைக்கப்பட்டது. கேரள வியாபாரிகள் வருகை அதிகரித்து உள்ளூர் வாழைத்தாருக்கு கிராக்கியால், இந்த வாரத்திலும் அனைத்து ரக வாழைத்தார்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இதில், ஒரு கிலோ செவ்வாழை ரூ.50 முதல் ரூ.55 வரையிலும், பூவந்தார் ரூ.40 வரையிலும், மோரீஸ் ரூ.38க்கும், கேரள ரஸ்தாளி ரூ.50 வரையிலும், நேந்திரன் ரூ.37க்கும் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.