தர்மசாலா: இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் சதம் விளாசி அசத்தியுள்ளனர். இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் நேற்று தர்மசாலாவில் தொடங்கியது. டாஸ் வென்ற பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி 57.4ஓவரில் 218 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இந்திய சுழல் வீரர்கள் குல்தீப் 5, அஸ்வின் 4, ஜடேஜா ஒரு விக்கெட் எடுத்தனர்.
அதன் பிறகு இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 135ரன் எடுத்தது. இந்நிலையில் களத்தில் உள்ள இந்தியாவின் ரோகித் 52, சுப்மன் 26ரன்னுடன், 83ரன் பின்தங்கிய நிலையில் 2வது நாளான இன்று முதல் இன்னிங்சை தொடர்ந்தனர். கேப்டனான ரோஹித் சர்மா மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி சதமும் அடித்து டெஸ்ட் போட்டிகளில் தனது 12வது சதத்தை 106 ரன்களில் பதிவு செய்தார்.
ரோஹித் சர்மாவிற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து தேவைக்கு ஏற்ப சிக்ஸர், பவுண்டரிகள் அடித்து அசத்திய சுப்மன் கில்லும் சதம் (142 பந்துகளில் 101 ரன்கள்) அடித்து அசத்தினார். சுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரின் மிக சிறப்பான பேட்டிங்கின் மூலம், போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை 1 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் குவித்துள்ள இந்திய அணி, 46 ரன்கள் முன்னிலையுடன் உள்ளது.