சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை பெருநகர காவல் ஆணையர் நேற்று அறிவித்துள்ள வாகனங்களுக்கான வேகக் கட்டுப்பாடு 40 கிலோ மீட்டர் என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றது. தற்போது உள்ள அறிவியல், மக்களின் அவசர தேவை, துரித போக்குவரத்து போன்றவற்றை கவனத்தில் கொண்டு, சென்னை நகருக்குள், மாநகர காவல் ஆணையர் அறிவித்துள்ள வேகக்கட்டுபாடான 40 கிலோ மீட்டர் என்பதை, அத்தியாவசிய சேவையான போக்குவரத்தை கருத்தில் கொண்டு, மறு பரிசீலனை செய்து, உரிய ஆய்வுகளுடன், உயர்த்தி அறிவித்திட வேண்டுகிறோம்.
மேலும், தற்போது அறிவிக்கப்பட்ட 40 கிலோ மீட்டர் வேகக் கட்டுப்பாட்டினை வாகன ஓட்டிகள் குறிப்பாக இருசக்கரம், ஆட்டோ ஓட்டுனர், டெம்போ, லாரி ஓட்டுனர் மற்றும் மருத்துவ சேவையின் தேவைக்காகவும் இக்கட்டுப்பாட்டினை அவசர தேவை கருதி மீறுகின்ற போது, அதனால் அபராதக் கட்டணம் செலுத்தும் நிலை உருவாக்கப்பட்டு மிகக்பெரும், வாழ்வாதார சிக்கலுக்கு உள்ளாக்கப்படுவார்கள். ஒட்டுமொத்த வாகன ஓட்டுனர்கள், வாகன உரிமையாளர்கள், மற்றும் பொதுமக்களின் போக்குவரத்து போன்றவற்றை ஆய்வு செய்து, தற்போது அறிவித்துள்ள வேகக்கட்டுப்பாட்டினை உயர்த்தி அறிவித்திட வேண்டும்.