வேலூர் : வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று ஆய்வு செய்த கமிஷனர் வியாபாரிகளுக்கு உத்தரவிட்டார்.
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் காய்கறி கடைகள், பூக்கடைகள், மளிகை கடைகள், பழக்கடைகள் உள்பட ஏராளமான கடைகள் உள்ளன. இதேபோல் மண்டித்தெருவில் அரிசி கடைகள், நவதானியம், மளிகைக்கடைகள் உள்ளது. இதனால் தேவையான பொருட்களை வாங்க மார்க்கெட்டிற்கு அதிகளவிலான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இதில் நேதாஜி மார்க்கெட் காய்கறி கடைகளில் இருந்து அதிகளவு குப்பை கழிவுகள் சேர்கிறது. இதில், மார்க்கெட், மண்டிவீதியில், நடைபாதைகளை ஆக்கிரமித்து நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் வைக்கப்பட்டுள்ளது. கடைகள் அதிகம் இருப்பதால் குப்பை வாகனங்கள் உள்ளே சென்று குப்பைகளை அகற்ற முடியாத நிலை உள்ளது. குப்பைகள் அதிகளவில் மார்க்கெட்டிேலயே தேங்கி விடுகிறது. எனவே நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும்படி கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் கமிஷனர் ரத்தினசாமி, மாநகர நல அலுவலர் கணேஷ் ஆகியோர் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அவர், நடைபாதையில் கடைகள் வைக்கக்கூடாது. ஏற்கனவே வைத்துள்ள கடைகளை அகற்றிக்கொள்ள வேண்டும். மார்க்கெட்டில் சேகரிக்கும் குப்பைகளை வாகனங்கள் உள்ளே வந்து அள்ளிச்செல்லும் வகையில் இடம் இருக்க வேண்டும். இதற்கு வியாபாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என கடைக்காரர்களுக்கு கமிஷனர் அறிவுறுத்தினார். தொடர்ந்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகளை அழைத்து கூட்டம் நடத்தி இதுகுறித்து அறிவறுத்தும்படி அலுவலர்களுக்கு கமிஷனர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது 2வது மண்டல சுகாதார அலுவலர் லூர்த்துசாமி உட்பட மாநகராட்சி பணியாளர்கள் இருந்தனர்.