ஊட்டி : தாவரவியல் பூங்கா இரண்டாம் சீசனுக்காக தயார் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது சால்வியா மலர் செடி கட்டிங் செய்து தயார் செய்யப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, முதல் சீசனான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதேபோல், இரண்டாம் சீசனான செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களிலும் அதிகளவு சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகின்றனர்.
கோடை சீசனின் போது, ஊட்டி தாவரவியல் பூங்காவில், பூங்கா முழுவதிலும் 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்படுவது வழக்கம். அதேபோல், 35 ஆயிரம் தொட்டிகளில் பல வகையான மலர் செடிகள் நடவு செய்யப்படும். இரண்டாம் சீசனின் போது மலர் கண்காட்சி நடத்தப்பட மாவட்டாது. எனினும், பூங்கா முழுவதிலும் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்படும். அந்த மலர் செடிகளில் பல வகையான வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். இந்நிலையில், முதல் சீசன் முடிந்த நிலையில், தற்போது பூங்காவில் உள்ள மலர் செடிகள் அனைத்தும் வாடிவிட்டன. அதேபோல், தொட்டிகளில் வைத்த மலர் செடிகளும் வாடிவிட்டன. தற்போது இரண்டாம் சீசனுக்காக பூங்கா தயார் செய்யும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது.
தற்போது, அனைத்து மலர் செடிகளிலும் விதைகள் சேகரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், சால்வியா, லில்லியம் போன்ற மலர் செடிகளின் கட்டிங்குகள் தயார் செய்யும் பணிகளும் துவக்கப்பட்டுள்ளன. நேற்று தாவரவியல் பூங்கா தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள சால்வியா மலர் செடிகளில் கவாத்து செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.