ஊட்டி: ஊட்டி அருகே பகல்கோடு மந்து பகுதியை சேர்ந்த 14 வயதான 9ம் வகுப்பு மாணவி, கடந்த 24ம் தேதி பள்ளி சென்றவர் வீடு திரும்பவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடியபோது அங்கர்போர்டு எஸ்டேட் வனப்பகுதியில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து பைக்காரா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதில், பள்ளி முடிந்து எச்பிஎப் பகுதியில் அந்த மாணவி பஸ்சுக்கு காத்திருந்தபோது கக்கோடு மந்து பகுதியை சேர்ந்த ராஜினேஷ் குட்டன் (25) என்பவர் மாணவியை காரில் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொன்றது தெரிய வந்தது. கடந்த 2 நாட்களாக போலீசார் அவரை தேடி வந்தநிலையில் நேற்று ராஜினேஷ் குட்டன் காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.