திருவண்ணாமலை காந்தி சிலை அருகே நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், திருவண்ணாமலை தொகுதி பாஜ வேட்பாளர் அஸ்வத்தாமனை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: உலக நாடுகள் எல்லாம் வியந்து பிரதமர் மோடியை பார்க்கிறது. தமிழ்நாட்டில் திண்டுக்கல் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் மிகப்பெரியது. எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும்.
அதற்கு நாங்கள் துணை நிற்போம். ஏற்கனவே 32 மாவட்டங்களாக இருந்ததை 38 மாவட்டங்களாக பிரித்தனர். வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களை பிரிக்க பாமக தான் குரல் கொடுத்தது. பிரதமர் மோடி என் மீது பாசம் கொண்டிருக்கிறார். அதனால் சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாங்கள் இருவரும் கட்டித் தழுவிக் கொண்டோம். நான் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினால், அந்த திட்டங்களை எல்லாம் பிரதமர் மோடி கொண்டுவர உதவியாக இருப்பார்.
10.5 சதவீதத்திற்காகவும், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதற்காகவும் கோட்டைக்கு நேரில் சென்று முதல்வரை சந்தித்து பேசினேன். அப்போது, 8 மந்திரிகளும் 10 துறை செயலாளர்களும் உடன் இருந்தார்கள். ஊமை ஜனங்களுக்கு உங்களை விட்டால் யார் என்று முதல்வரிடம் சொன்னேன். இவ்வாறு அவர் பேசினார்.