சென்னை: தமிழ்ப்பாடத் தேர்வு விடைத்தாள்களை, பிற துறையின் பேராசிரியர்களை கொண்டு திருத்துவது தவறு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரது டிவிட்டர் பதிவு: அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலம் கடந்த ஏப்ரல் 21ம் தேதி நடத்தப்பட்ட பொறியியல் பட்டப்படிப்புக்கான முதலாம் ஆண்டு தமிழ் மொழிப் பாடத் தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி மே.25ம் தேதி தொடங்கியுள்ளது. தமிழர் மரபு என்ற தமிழ்ப் பாட விடைத்தாளை திருத்த தனியார் பொறியியல் கல்லூரிகளில் இருந்து இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உடற்கல்வியியல் ஆசிரியர்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக பேராசிரியர்கள் மூலம் கிடைத்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்மொழிப் பாட விடைத்தாள்களை பிற பாட ஆசிரியர்களைக் கொண்டு மதிப்பீடு செய்வதையும், அதை அண்ணா பல்கலைக்கழகம் கண்டுகொள்ளாமல் அனுமதிப்பதையும் விட தமிழ் மொழியை இழிவுபடுத்த முடியாது.