சோழிங்கநல்லூர்: செல்போன் செயலி மூலம் அறிமுகமாகி, காதலிப்பதாக கூறி புகைப்படம் மற்றும் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளத்தில் பரப்பி விடுவதாக, இளம்பெண்ணை பணம் கேட்டு மிரட்டிய ராஜஸ்தான் வாலிபரை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். சென்னை பெருநகர தெற்கு மண்டல சைபர் க்ரைம் காவல் நிலையத்தில், இளம்பெண் ஒருவர் புகார் மனு அளித்தார். அந்த புகாரில், எனக்கு செல்போன் செயலி மூலம் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பரூக் அலி (34) என்பவர் பழக்கமானார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால், அவர் கேட்கும்போது பல கோணங்களில் எடுத்து அனுப்பிய புகைப்படம் மற்றும் வீடியோ காலில் பேசும்போது எடுத்த ஆபாச வீடியோவை வைத்து, தன்னிடம் பணம் கேட்டு மிரட்டி வருகிறார்.
எனவே, அவரிடம் இருந்து புகைப்படம் மற்றும் ஆபாச வீடியோக்களை அழிக்க வேண்டும், என தெரிவித்து இருந்தார். அதன்பேரில், சைபர் க்ரைம் போலீசார் இளம்பெண்ணிடம் பேசிய பரூக் அலியின் வாட்ஸ்அப் எண்ணை வைத்து விசாரணை நடத்தியபோது, ராஜஸ்தான் மாநிலம் ஜூசுன்னு பகுதியை சேர்ந்த பரூக் அலி என்பவர், இளம்பெண்ணை காதலிப்பது போல் நடித்து, புகைப்படங்கள் மற்றும் வீடியோ காலில் பேசும்போது எடுத்த ஆபாச வீடியோக்களை வைத்து மிரட்டி பணம் கேட்டு வந்ததும், பணம் கொடுக்க வில்லை என்றால் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவதாக கூறி மிரட்டியதும் தெரியவந்தது.
அதைதொடர்ந்து சைபர் க்ரைம் போலீசார் ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்று, பரூக் அலியை அம்மாநில போலீசார் உதவியுடன் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் இருந்து இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் ஆபாச வீடியோக்கள் வைத்திருந்த 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.