செய்யாறு : செய்யாறு அருகே பெய்த கோடை மழை காரணமாக வயலில் மழைநீர் தேங்கி 100 ஏக்கர் நெற்பயிர்கள் முளைத்து சேதம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வாக்கடை, முக்கூர் ஆகிய கிராமங்களில் ஏரி பாசனம் மூலம் ஆயிரம் ஏக்கர் நெல் சாகுபடி செய்திருந்த நிலையில், கோடை மழைக்கு முன்பே 75 சதவீதம் வரை நெல் அறுவடை செய்துவிட்டனர்.இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த கோடை மழையால் தாழ்வான வயல்களில் தண்ணீர் தேங்கி எஞ்சிய நெற்பயிர்கள் முளைத்து சேதம் ஏற்பட்டுள்ளது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளது.
இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.எனவே, வருவாய் துறை, வேளாண் மற்றும் கால்நடை துறையினர் உடனடியாக ஆய்வு செய்து அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் அறிக்கை அனுப்பி உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், வாக்கடை கிராமத்தில் நெற்களங்களில் நெல் மூட்டைகள் அதிகளவு தேக்கம் அடைவதால் அங்கு நேரடி நெல் கொள்முதல் நிலையம் ஏற்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.