புதுடெல்லி: ரயில்வே வேலைக்கு நிலம் வாங்கிய புகாரால் லாலுபிரசாத் யாதவ் குடும்பத்தினரின் ரூ.6 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் கடந்த 2004ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை ரயில்வே அமைச்சராக இருந்த போது ரயில்வே வேலைக்கு லஞ்சமாக நிலம் வாங்கியதாக புகார் எழுந்தது. மேலும் இந்திய ரயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் குரூப் டி பதவிகளில் பல்வேறு நபர்கள் நியமிக்கப்பட்டதாகவும், அதற்குப் பதிலாக, சம்பந்தப்பட்ட நபர்கள் தங்கள் நிலத்தை லாலு பிரசாத்தின் குடும்ப உறுப்பினர்களுக்கு மாற்றியதாகவும் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ குற்றஞ்சாட்டியுள்ளது.
தற்போது இந்த வழக்கில் லாலு பிரசாத், அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான முக்கிய சில சொத்துக்களை முடக்கி உள்ளதாக அமலாக்க இயக்குனரகம் அறிவித்து உள்ளது. சட்டவிரோத பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.6 கோடி. லாலுபிரசாத், அவரது மனைவி ரப்ரி தேவி, பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், மகள்கள் மிசா பார்தி, சந்தா யாதவ், ராகினி யாதவைசிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இந்த வழக்கில் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.