புதுடெல்லி: ‘தண்டவாளங்களின் நிலை மோசமாக இருப்பதால், நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத்தின் சராசரி வேகம் மணிக்கு 83 கிமீ ஆக கடந்த 2 ஆண்டாக இயக்கப்படுகிறது’ என ஆர்டிஐ மனு ஒன்றுக்கு ரயில்வே நிர்வாகம் பதிலளித்துள்ளது. மணிக்கு 180 கிமீ வேகத்தில் இயக்கக் கூடிய அதிநவீன வசதிகளுடன் வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது 14 முக்கிய வழித்தடங்களில் இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளில் வந்தே பாரத் ரயில்களின் சராசரி வேகம் குறித்து மத்தியபிரதேசத்தை சேர்ந்த சந்திர சேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்திருந்தார்.
அதற்கு ரயில்வே நிர்வாகம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: வந்தே பாரத் ரயில்கள் மணிக்கு 160 கிமீ வேகம் வரை செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், கடந்த 2 ஆண்டில் அதன் சராசரி வேகம் 83 கிமீ மட்டுமே உள்ளது. 2021-22ல் சராசரி வேகம் 84.48 ஆகவும் 2022-23ல் சராசரி வேகம் 81.38 ஆகவும் இருந்துள்ளது. இதற்கு காரணம் தண்டவாளங்களின் மோசமான நிலையே. மும்பை சிஎஸ்எம்டி – சாய்நகர் சீரடி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் குறைந்தபட்சமாக 64 கிமீ சராசரி வேகத்தில் இயக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக முதல் வந்தே பாரத் ரயிலான டெல்லி-வாரணாசி வழித்தடத்தில் மணிக்கு 95 கிமீ சராசரி வேகத்தில் இயக்கப்படுகிறது. அதே சமயம் ஆக்ரா கன்டோன்மென்ட்-துக்ளகாபாத் வழித்தடத்தில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேகமாக 160 கிமீ வேகத்தில் வந்தே பாரத் இயக்கப்படுகிறது.
தண்டவாளங்கள் நன்றாக உள்ள வழித்தடத்தில் ரயில் வேகம் அதிகமாகவே உள்ளது. அதே சமயம் மற்ற அதிவேக ரயில்களான சதாப்தி, ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்களைக் காட்டிலும் வந்தே பாரத் அதிகபட்ச சராசரி வேகத்தை கொண்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, மேம்படுத்தப்பட்ட வந்தே ரயில்கள் மணிக்கு 200 கிமீ வேகத்தில் பயணிக்கக் கூடிய வகையில் தயாரிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.