திருவொற்றியூர்: மாதவரம் பஸ் நிலையத்தில் தூங்குவதில் இடம் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாதவரம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் வேளவேந்தன் (38). அதே பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளி சிவசங்கரன் (47). இவர்கள் இருவரும், நேற்று முன்தினம் இரவு மது அருந்தி விட்டு மாதவரம் பஸ் நிலையம் உள்ளே இருந்த பயணிகள் இருக்கையில் தூங்க சென்றுள்ளனர். அப்போது ஒரு இருக்கை மட்டுமே காலியாக இருந்தது. இதனால் அந்த இருக்கையில், ‘நான்தான் படுப்பேன்’ எனக்கூறி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்தனர். பின்னர் வேளவேந்தன், இருக்கையை போராடி பிடித்துக்கொள்ள சிவசங்கரன் வேறு வழியில்லாமல் அங்கிருந்து சென்று சிறிது தூரத்தில் தரையில் படுத்துக் கொண்டார்.
இதனால், சிவசங்கருக்கு வேளவேந்தன் மீது ஆத்திரம் ஏற்பட்டது. அதிகாலை 5 மணி அளவில், பெரிய கல்லை எடுத்து வந்து, வேளவேந்தன் தலையில் போட்டுவிட்டு தப்பினார். இதனால் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் இருந்த வேளவேந்தனை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே வேளவேந்தன் உயிரிழந்தார். தகவல் அறிந்து மாதவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பூபாலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வேளவேந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் சுற்றித்திரிந்த சிவசங்கரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.