சென்னை: 10ம் வகுப்பு தேர்வு எழுதிய புழல் சிறைக் கைதிகள் 100% தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு சிறைத்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் கல்வி கற்க ஆர்வம் உள்ள கைதிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு கல்வி ஆர்வலர்களைக் கொண்டு கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. சிறைக் கைதிகள் தனித்தேர்வர்களாக பொது தேர்வுகளை எழுத சிறைச்சாலை வளாகத்திற்குள் பிரத்யேக தேர்வு மையங்கள் அமைக்கப்படும். அதன்படி, இந்த ஆண்டிற்கான 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுத புழல் சிறை கைதிகள் 44 பேர் விண்ணப்பித்தனர்.
இதில், 8 கைதிகள் தேர்வில் பங்கேற்காத நிலையில், மீதமுள்ள 36 கைதிகள் 10ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு எழுதினர். இந்நிலையில், 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியானது. இதில், புழல் சிறைச்சாலையைச் சேர்ந்த 5 பெண் கைதிகள் உள்பட 36 கைதிகளும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றனர். 100% தேர்ச்சி பெற்ற கைதிகளுக்கு சிறைத்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.