புதுடெல்லி: “டெம்போ கோடீஸ்வரர்களின் கைப்பாவை பொம்மை மோடி” என காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. தெலங்கானாவில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மோடி, தொழிலதிபர்கள் அதானி, அம்பானி பற்றி விமர்சிப்பதை ராகுல் காந்தி இப்போது நிறுத்தி விட்டார். அதானி, அம்பானியிடம் இருந்து காங்கிரசுக்கு டெம்போக்கள் நிறைய கருப்பு பணம் வந்து விட்டதா? இருவரிடமிருந்தும் ராகுல் எவ்வளவு பணம் பெற்றார் என்பதை அறிய விரும்புகிறேன்” என்று பேசியிருந்தார். இதற்கு ராகுல் காந்தி “அதானி, அம்பானியிடம் இருந்து டெம்போக்களில் பணம் வாங்கி தான் மோடிக்கு பழக்கமா?” என்று கேள்வி எழுப்பி பதிலடி கொடுத்திருந்தார்.
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று முன்தினம் நடந்த பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது, “மோடிக்கும், அமைச்சரவை, நாடாளுமன்றம், அரசியலமைப்பு ஆகியவற்றுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மோடி ஒரு நாட்டின் பிரதமர் இல்லை. அரசியல் சாசனத்தை நசுக்க நினைக்கும் மோடி 21ம் நூற்றாண்டில் ஒரு ராஜா” என்று கடுமையாக தாக்கினார். இதை தன் டிவிட்டர் பதிவில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, “மோடி டெம்போ கோடீஸ்வரர்களின் கைப்பாவை பொம்மை” என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.