புதுச்சேரி: புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலை குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர். சிறுமி கொலை விவகாரத்தில் பெற்றோர், உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் உடலை பெற்றுக் கொள்ள சம்மதம் தெரிவிக்கப்பட்டது. புதுச்சேரி சோலை நகரில் கடந்த கடந்த மார்ச் 2 அன்று 9 வயது சிறுமி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது மாயமானார். 5 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது தெருவில் சிறுமி தனியாக நடந்து செல்லும் காட்சி மட்டும் பாதிவாகியிருந்தது. 4 நாட்களாக சிறுமியை தேடிவந்த நிலையில் நேற்று அம்பேத்கர் நகர் பகுதி கால்வாயில் உடல் கண்டெடுக்கப்பட்டது.
சிறுமியை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி சாக்கடையில் வீசியது தெரியவந்தது. சிறுமி உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்திய போலீசார், பலாத்கார முயற்சியில் இறந்ததை உறுதிப்படுத்தினர். சிறுமியை கொன்று கை, கால்களை கட்டி மூட்டையாக வாய்க்காலில் வீசிய வழக்கில் இருவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, சிறுமி படுகொலைக்கு நியாயம் கேட்டு வீதியில் இறங்கி புதுவை மக்கள் போராடி வருகின்றனர்.
கல்லூரி மாணவர்கள், மாணவிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் புதுவையின் பல பகுதிகளில் ஒன்று திரண்டு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, சிறுமியின் பெற்றோரை நேரில் அழைத்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை சிறுமியின் உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர் தெரிவித்தனர். பலாத்கார முயற்சியில் கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
மேலும் சிறுமி கொலை விவகாரத்தில் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி உறுதி அளித்தார். இந்நிலையில், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து உடலை பெற்றுக் கொள்ள பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ஜிப்மர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப் பின் சிறுமியின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர். உடற்கூராய்வு அறிக்கை விரைவில் வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.