திருவள்ளூர்: தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றிப்பு சார்பில் தமிழ்நாடு நில அளவை திட்ட இயக்குநரை கண்டித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செந்தில்குமரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் ஜோதி, மாவட்ட இணை செயலாளர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் தாலிப் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநிலத் துணைத் தலைவர் மணிகண்டன், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓவூதியர் சங்கத் மாவட்டத் தலைவர் இளங்கோ, வட்டத் துணைத் தலைவர் யோகராசு, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மெல்கி ராஜாசிங் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
மேலும் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாநில செயலாளர் பேபி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதில் மாவட்ட செயலாளர் பிரதீப் ஹரேஷ்குமார் கோரிக்கை விளக்க உரையாற்றினார். முடிவில் கோட்ட பொருளாளர் நாராயணன் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அனைத்து நிர்வாகிகளும் கருப்பு பட்டை அணிந்து கொண்டு கலந்துக் கொண்டனர். நில அளவை கள அலுவலர்களின் பல்வேறு பணிச் சுமைகளை கருத்தில் கொள்ளாமல் நில அளவர் முதல் உயர்நிலை அலுவலர்கள் வரை உள்ளவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வரும் நில அளவை மற்றும் நிலவரி திட்ட இயக்குனர் தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். மேலும் இதுபோல் ஊழியர் விரோதப் போக்கு தொடர்ந்து நடைபெற்றால் மாநிலம் முழுவதும் மாபெரும் போராட்டம் நடைபெறும் எனவும் ஆர்ப்பாட்டத்தின் போது எச்சரித்தனர்.