சென்னை: சொத்துகளை முடக்க கோரி நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கில் லைகா நிறுவனம் ஜன. 19க்குள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. லைகா நிறுவனத்தின் ரூ.5.24 கோடி சொத்துகளை முடக்கக் கோரி நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்திருந்தார்.
நடிகர் விஷால் அவரின் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ தயாரிப்பில் ‘சண்டக்கோழி2’ திரைப்படம் வெளியானது. இப்படத்தின் தமிழ், தெலுங்கு உரிமை மற்றும் சாட்டிலைட் வெளியீட்டு உரிமைக்காக லைகா நிறுவனத்திடம் கடந்த 2018ம் ஆண்டு ரூ.23.21 கோடிக்கு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி வெளியிடப்பட்டது.
ஆனால் அதற்கான 12% ஜிஎஸ்டி தொகையை லைகா நிறுவனம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. எனவே அந்த தொகை மற்றும் அபராத தொகையுடன் தன்னுடைய நிறுவனம் சார்பில் ரூ.4.88 கோடி தான் செலுத்தியதாக விஷால் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் தன்னை மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ள லைகா நிறுவனம், பல இடங்களில் கடன் பெற்று ரூ.500 கோடி செலவில் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன்2’ படத்தை தயாரித்து வருகிறது. ஒருவேளை ‘இந்தியன்2’ வெற்றியடையாவிட்டால் தனக்கும் லைகா நிறுவனத்திற்கு மிகப்பெரிய நிதி நெருக்கடி ஏற்படும்.
அதே நேரத்தில் தனக்கு செலுத்த வேண்டிய பணம் கிடைக்காது. லைகா நிறுவனம் வெளிநாட்டு நிறுவனம் என்பதால், நிறுவனத்தை மூடிவிட்டு தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் வெளிநாடு தப்பி செல்ல வாய்ப்புள்ளது.
எனவே தான் செலுத்திய ஜிஎஸ்டி தொகை, அபராத தொகையை வட்டியுடன் சேர்த்து ரூ.5.24 கோடி வழங்க வேண்டும் என நடிகர் விஷால் கோரிக்கை வைத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இது தொடர்பாக லைகா நிறுவனம் ஜன. 19க்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.