திருச்சி: திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ஜன.2ம் தேதி சிறப்பு விமானம் மூலம் திருச்சிக்கு வருகிறார். திருச்சி சர்வதேச விமான நிலைய புதிய முனையத்தில் காலை 10 மணியளவில் வந்திறங்கும் பிரதமர் மோடி, விவிஐபிக்கள் செல்லும் வழியாக அங்கிருந்து காரில் புறப்பட்டு பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு காலை 10.30 மணிக்கு செல்கிறார். அங்கு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர் 15 மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசுகிறார். இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த விழாவை முடித்து கொண்டு தொடர்ந்து, அங்கிருந்து 11.45 மணிக்கு புறப்பட்டு 12 மணிக்கு திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு பிரதமர் வருகிறார். அங்லி ரூ.1,200 கோடியில் நாட்டின் கலாசாரம், பாரம்பரியத்தை உணர்த்தும் கலை நயத்துடன் பிரமாண்டமாக திருச்சியில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலைய முனையத்தை திறந்து வைக்கிறார். மேலும், பல்வேறு புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பின்னர் நிகழ்ச்சியை முடித்து விட்டு பாஜ முக்கிய நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி வருகையையொட்டி திருச்சி மாநகரம் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.