டெல்லி: ஒன்றிய அரசு பணிகளுக்கு புதிதாக தேர்வான பணியாளர்கள் 51,000 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. ரோஜ்கர் மேளா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி 51,000 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார். பல்வேறு படைகளில் பணியாற்றும் புதிய பணியாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ரோஸ்கர் மேளாவின் கீழ், அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாகப் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு சுமார் 51,000 நியமனக் கடிதங்களை பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் வழங்கினார்.
ஒன்றிய அரசுப் பணியிடங்களில் ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று ஒன்றிய பாஜக அரசு வாக்குறுதி அளித்தது. ரோஜ்கர் மேளா என்ற பெயரில் வேலைவாய்ப்பு முகாம்களை இந்தியா முழுவதும் நடத்தி வருகிறது. இதன் கீழ் ஒன்றிய, மாநில அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் பணியமர்த்தப்படும் சுமார் 51,000 பேருக்கு வேலைவாய்ப்புக்கான பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்வில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார்.
கடைசியாக கடந்த ஜூலை மாதம் நாடு முழுவதும் 44 இடங்களில் இந்த வேலைவாய்ப்பு விழாக்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் 70,000க்கும் அதிகமான இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். தற்போது இதனைத் தொடர்ந்து, இன்று 51,000 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார். இந்த முறை உள்துறை அமைச்சகம் (MHA) மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF), எல்லைப் பாதுகாப்புப் படை (BSF), சாஷ்த்ர சீமா பால் (SSB), மத்திய ஆயுதப் போலீஸ் படை (CAPFs), அசாம் ரைபிள்ஸ், மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF), இந்தோ திபெத்திய எல்லைக் காவல்துறை (ITBP), போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (NCB) மற்றும் டெல்லி காவல்துறை என ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் துறைகளில் கான்ஸ்டபிள் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகின்றன
* பிரதமர் மோடி உரை:
இளைஞர்கள் நாட்டுக்கு சேவை செய்ய ஆசைப்படுகிறார்கள். இன்று பணி நியமன ஆணைகளைப் பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் இந்த வேளையில் இவர்களை ‘நாட்டை பாதுகாப்பவர்கள்’ என்று கூறலாம்’ என்றார். இந்த திட்டத்தின் மூலம் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்குள் 10 லட்சம் பேருக்கு ஒன்றிய அரசு பணி வழங்கப்படும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. எனவே அவ்வப்போது ‘ரோஜ்கர் மேளா’ வேலைவாய்ப்பு விழா நடத்தப்பட்டு ரயில்வே, போலீஸ், தபால் துறை, வருமான வரித்துறை, சுங்கத்துறை, குடிமையியல் துறை போன்ற துறைகளுக்கு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கினார்.
பார்மா துறை வேகமாக வளர்ந்து வருகிறது, இது வரும் நாட்களில் பெரிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும். ஆட்டோமொபைல் துறையும் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த இரண்டு தொழில்களும் (மருந்து மற்றும் ஆட்டோமொபைல் தொழில்) வரும் நாட்களில் மேலும் வளர்ச்சி அடையும். 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியப் பொருளாதாரத்திற்கு சுற்றுலாத் துறை ரூ.20 லட்சம் கோடிக்கு மேல் பங்களிக்கும், இளைஞர்களுக்கு 13-14 கோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இந்த பத்தாண்டுகளில் உலகின் முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும். இந்த உத்தரவாதத்தை அளிக்கும் போது, அதை முழுப்பொறுப்புடன் செய்வேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.