புதுடெல்லி: ‘செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப திறன்களில் இந்தியா முன்னின்று உலகை வழிநடத்திச் செல்லும்’ என பிரதமர் மோடி கூறி உள்ளார். டெல்லி பாரத் மண்டபத்தில் ஸ்டார்ட் அப் மகாகும்பம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது: ஏஐ, செமிகண்டக்டர், குவாண்டம் ஆகியவற்றில் 3 திட்டங்களை அரசு ஏற்கனவே தொடங்கி உள்ளது. இவை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளையும், முதலீட்டாளர்களுக்கு முதலீடு வாய்ப்புகளையும் உருவாக்கும். நாம் ஏஐ தொழில்நுட்பத்தின் புதிய சகாப்தத்தில் இருக்கிறோம்.
ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என உலகமே ஒப்புக் கொள்கிறது. இந்த வாய்ப்பை நாம் விட்டுவிடக் கூடாது. ஏஐ தொழில்நுட்பத்தில் உலகை வழிநடத்தும் திறன் இந்தியாவிடம் இருக்கிறது, அது இருக்க வேண்டும். எனவே, பல நாடுகள் சந்திக்கும் உலகளாவிய பிரச்னைகளுக்கு தீர்வு காணும் ஏஐ தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் இளம் தொழில்முனைவோரும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் கவனம் செலுத்த வேண்டும். தற்போது சுமார் 1.25 லட்சம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.