‘‘தொகுப்பூதிய டாக்டர்கள் நியமனத்தில் விளையாடிய ஊழியர் தூக்கி அடிக்கப்பட்டிருக்கிறாராமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘உப்பை தின்ற அதிகாரிகள் தண்ணி குடித்துதான் ஆகணும். இது யாருக்கு பொருந்துமோ, இல்லையோ….தவறு செய்யும் அதிகாரிகளுக்கு ஏக பொருத்தம். அல்வா நகரில் தேசிய கிராமப்புற சுகாதார இயக்கத்திற்கு இரண்டு தொகுப்பூதிய டாக்டர்கள் நியமனத்தில் அதிகாரிகள் புகுந்து விளையாடி விட்டனராம்.. நேர்முகத் தேர்வே இல்லாமல் இந்த நியமனத்தை முடிச்சிருக்காங்களாம்.. பொறுப்பாக செயல்பட வேண்டிய பொன்னான துணை அதிகாரி ஆடு புலி ஆட்டம் போட்டாராம்.. இன்டர்வியூவே இல்லாமல் இப்படி ‘பல்லை’ பிடுங்கி விட்டார்களே என இந்த பணிக்கு விண்ணப்பித்தவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தை கையில் எடுத்தாராம்.. அப்போது தான் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததாம்.. ராணி போல் இருந்த அதிகாரி விடுப்பில் செல்ல அந்த நேரத்தில் முத்தான ஊழியர் வேலையை முடித்து விட்டாராம்.. இதில் சிக்கியவர் தற்போது மலையான ஊருக்கு தூக்கி அடிக்கப்பட்டுள்ளார்.. மேலும் இருவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் பறந்துள்ளதாம்.. துறை ரீதியாகவும் இந்த விவகாரத்தை விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கூட்டணி கட்சி தலைவர்களின் பெயர்கூட தெரியாம குக்கர் தலைவர் குழம்பிய கதை தெரியுமான்னு’’ கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மலைக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியில் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து குக்கர் தலைமையானவர் நேற்று முன்தினம் இரவு பஸ் நிலையம் அருகே வாக்கு சேகரிக்க போனதால கூட்டத்தை அதிகம் காட்டணும்னு தலைமையிடத்தில் இருந்து முதல்நாளே மாவட்ட பொறுப்பாளர்களுக்கு உத்தரவு போட்டிருக்காங்க… தலைமையிடத்தில் இருந்து வந்த உத்தரவால் பதறிப்போன பொறுப்பாளர்கள் ‘வைட்டமின் ப’ கொடுத்தாவது கூட்டத்தை காட்ட முடிவு செய்தாங்களாம்.. இதற்காக ‘‘வைட்டமின் ப’’ கொடுப்பதாக கூறி பெண்கள் அழைச்சிட்டு போயிருக்காங்க.. ஆனா, குறிப்பிட்ட நேரத்திற்குள் குக்கர் தலைமையானவர் வராததால் மணிக்கணக்கில் காத்திருந்தவங்க ‘வைட்டமின் ப’ கேட்டு அழைச்சிட்டு வந்த பொறுப்பாளர்களிடம் நச்சரிக்க தொடங்கிட்ாங்களாம்.. பணம் கொடுக்கா விட்டால் கூட்டம் கலைந்து விடக்கூடாது என்கிற பயத்தில் நோட்டில் ஏற்கனவே எழுதி வச்சிருந்த அழைச்சிட்டு வந்தவர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டு அனைவருக்கும் தலா ரூ.200 விநியோகிக்கப்பட்டதாம்… பணத்தை வாங்கிய ஒருசிலர் குக்கர் தலைமையானவர் வர காலதாமதமானதால அங்கிருந்து நடையை கட்டிட்டாங்களாம்.. காலதாமதமா வந்த குக்கர் தலைமையானவர் திறந்த வேனில் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்காரு.. டென்சனில் பேச தொடங்கும் முன்பே கூட்டணி கட்சி தலைவர்களின் பெயர் தெரியாமல் குழப்பத்தில் திறந்தவேனில் கட்டப்பட்டு இருந்த சில கொடிகளை பார்த்து அந்த கட்சி, தலைவர்கள் பெயர்களை வேட்பாளரிடம் கேட்டு தெரிந்துகொண்டு பேச தொடங்கினாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கொடுக்க ேவண்டியதையும் கொடுக்கல.. மரியாதையும் கிடைக்கலன்னு.. ஒரு கட்சி தொண்டர்கள் புலம்பறாங்களாமே…’’ என அடுத்த கேள்விக்கு தாவினார் பீட்டர் மாமா.
‘‘நடிகருக்கு அப்புறமா? அந்த அம்மா முரசு கட்சியோட முழு பொறுப்பையும் ஏத்துக்கிட்டாங்க… நாடாளும் மன்றத்தோட எலக்ஷன்ல போராடி எப்படியோ இலை கட்சியோட கூட்டணி வெச்சிருக்காங்க… கூட்டணி தலைமையோடத்தான் இருக்குதாம்… கீழ்மட்டத்துல நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டத்துல கூட்டணியே இல்லையாம்.. இதுல குறிப்பா சொல்லணும்னா பாதி கோணம் தொகுதியில, ஆறு காடான ஏரியாவுல, கொஞ்ச நாளைக்கு முன்னாடி இலைக்கட்சி வேட்பாளர் அறிமுகக்கூட்டம் நடந்திருக்கு.. அதுல கூட்டணி கட்சியான இலைக்கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம் போட்டாங்களாம்… ஆனா, முரசு கட்சி மாவட்ட நிர்வாகி உள்பட யாரையுமே அழைக்கலையாம்.. இதனால, முரசு கட்சிக்காரங்க யாரும் கலந்துக்கவே இல்லையாம்.. இப்படி பாதி கோணம் நாடாளும் மன்ற தொகுதியில இலைக்கட்சிக்கும், கூட்டு அணியான முரசுக்கும் ஏழாம் பொருத்தமா இருக்குதாம்.. அதோட எலக் ஷனுக்கு கொடுக்க வேண்டியதையும் கொடுக்கலையாம்… மரியாதையும் கிடைக்கலைன்னு கட்சிக்காரங்க புலம்பிக்கிட்டிருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலையுடன் கூட்டணி உடைஞ்சாலும் மாங்கனி மாவட்டத்தில் நட்பு வளையத்தில் இருக்காங்களாமே தாமரை நிர்வாகிங்க..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி மாவட்டத்தில் தாமரை நிர்வாகிகள் சிலர், இலையின் நிர்வாகிகளோடு பலத்த நட்பு வளையத்தில் இருக்காங்களாம்.. கூட்டணி உடைஞ்சது என்று அவ்வப்போது ஜெனரல் செகரட்டரி முழங்கிக்கிட்டு இருந்தாலும் இவர்களோடு நிர்வாகிகள் காட்டும் நேசம் இன்னும் மாறவில்லையாம்.. ஒரு சில பகுதிகளில் தாமரை பார்ட்டிகள் பப்ளிக்காக இலையின் வேட்பாளருக்கு ஓட்டும் கேட்டுக்கிட்டு இருக்காங்களாம்.. இவர்களில் பெரும்பாலானவர்கள், கூட்டணி முறிவு குறித்த கடைசி நேர அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை இலையை நம்பி காத்திருந்தவங்களாம்.. இலையோடு ஒட்டிக்கொண்டால்தான், சாதகமான சில காரியங்களை சாதிக்க முடியும் என்றும் நம்பிக்கிட்டு இருந்தவங்களாம்.. அந்த நட்புதான் இப்போதும் நீடிச்சிக்கிட்டு இருக்காம்.. இதில் ஒரு சிலர், இலைக்கட்சியில் இணைவதற்கும் ஆயத்தமாக இருக்காங்களாம்.. ஆனால் அவர்கள் வைக்கும் நிபந்தனைகள்தான் கொஞ்சம் ஓவராக இருக்காம்.. இது ஒரு புறமிருக்க, ஒருவர் இணைந்தால் ஒரு ஓட்டு மட்டுமே என்ற ரீதியில் இவர்களின் செல்வாக்கு இருக்காம்.. இதை மோப்பம் பிடித்த இலையின் நிர்வாகிகள், இணைப்பை தாமதப்படுத்திக்கிட்டு போறாங்களாம்…’’ என்று முடித்தார் விக்கியானந்தா.
பிரசாரத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பேரு தெரியாம குழப்பத்தில் தவித்த குக்கர் தலைவர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
previous post