திருப்பூர்: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதிமுக, பாஜவினரை விமர்சித்தும் திருப்பூர் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒன்றிய பாஜ அரசு சமீபத்தில் அமல்படுத்தி உள்ளது. இந்த சட்டத்தால் நிறைய பாதகங்கள் இருப்பதாக பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் மாணவர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சட்டம் முன்மொழியப்பட்டபோது நாடாளுமன்றத்தில் அதிமுக ஆதரவாக வாக்களித்தது.
இதனால் தான் அந்த சட்டம் மாநிலங்களவையில் நிறைவேறியது. இந்நிலையில் திருப்பூரில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், ‘எதிர்காலத்தில் ஒவ்வொருவரையும் பாதிக்கும் சிஏஏ எனும் அசுரனை அழைத்த துரோகிகள்’ என்ற வாசகம் ஒரு பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. அதன் அருகில் பிரதமர் மோடி சிஏஏ என்ற கம்புடன் மக்களை அடிக்க ஓங்குகிறார். அதன் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி சிரிப்பதுபோன்றும் அண்ணாமலை கை கட்டி நிற்பதுபோன்றும் படங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. திருப்பூரில் பல்வேறு இடங்களில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.