புதுடெல்லி: சாகித்ய அகாடமி உள்ளிட்ட விருதுகள் அரசியல் காரணங்களுக்காக திருப்பி கொடுக்கப்படுவதை தவிர்க்க விருது பெறுபவர்களின் ஒப்புதலை பெறுதல் அவசியம் என்று நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது. போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாசாரத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு விருதுகள் வழங்குவது தொடர்பான அதன் 351வது அறிக்கையை நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், “சாகித்ய அகாடமி போன்ற விருதுகள் சாதனையாளர்களை கவுரவித்து வழங்கப்படுவதாகும்.
அரசியல் காரணங்களுக்காக அவற்றை திருப்பி கொடுப்பது நாட்டை அவமதிப்பதாகும். இது தங்களது சாதனைக்காக கவுரவிக்கப்பட்ட மற்ற விருது பெற்றவர்களை தரக்குறைவாக மதிப்பிடுவதாகும். மேலும், விருதுக்கான மதிப்பு, மரியாதையை கெடுப்பதாகும். எனவே, இது போன்ற முறையற்ற நடவடிக்கைகளை தவிர்க்கும் பொருட்டு, அரசியலுக்கு அப்பாற்பட்ட சாகித்ய அகாடமி அல்லது இதர அகாடமிகள் வழங்கும் விருதுகள் என எந்த விருதாக இருந்தாலும், அதனை திருப்பி அளிக்க மாட்டோம் என்று விருது பெறுபவர்களின் ஒப்புதலை பெற வேண்டும். இதில் அரசியலுக்கு இடமில்லை,’’ என்று கூறப்பட்டுள்ளது.