புதுடெல்லி: அரபிக்கடலில் இந்தியாவுக்கு வந்த கப்பலில் ட்ரோன் தாக்குதல் நடந்த நிலையில் சவுதி இளவரசருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியது முக்கியத்தும் பெற்றுள்ளது. சவுதி அரேபியா நாட்டின் இளவரசரும், பிரதமருமான முகமது பின் சல்மானுடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில், ‘சவுதி அரேபியா இளவரசரும், பிரதமருமான முகமது பின் சல்மானுடன், பிரதமர் மோடி உரையாடினார். அப்போது இந்தியா – சவுதி அரேபியா இடையேயான உறவுகள், எதிர்காலம் குறித்து விவாதிக்கப்பட்டது. மேற்கு ஆசியாவின் தற்போது நிலைமை குறித்து இரு தலைவர்களும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். அங்கு நடக்கும் தீவிரவாதம், வன்முறை, உயிர் சேதம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அந்த பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்காக இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொள்ளப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது. முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன் அரபிக்கடலில் இந்தியா நோக்கி வந்த ‘எம்வி கெம் புளூட்டோ’ என்ற வர்த்தக கப்பலின் மீது ட்ரோன் தாக்குதல் நடந்த நிலையில், இரு தலைவர்களின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்துள்ளது. செங்கடலில் அடிக்கடி கப்பல் போக்குவரத்து குறித்த அச்சம் நிலவி வருவதால், ஏமனில் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குறித்தும், அவர்களின் ட்ரோன் தாக்குதலை எதிர்கொள்ளுதல் குறித்தும் இரு தலைவர்களும் பேசியிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.