பெரம்பூர்: கொடுங்கையூர் ராஜரத்தினம் நகர் ஐ பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் சிவலிங்கம் (40), கூலி தொழிலாளி. இவரது மனைவி லோகநாயகி, குப்பை சேகரிக்கும் வேலை செய்து வருகிறார். இவர்களது 17 வயது மகள் பூஜா, தண்டையார்பேட்டையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது, மின்விசிறியில் தூக்கிட்டு பூஜா தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பூஜா உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், பூஜா உயிரிழப்பதற்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தது தெரிய வந்தது. அதில், அம்மா ஐ மிஸ் யூ, எனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. நீங்கள் குப்பை பொறுக்கி என்னை படிக்க வைக்கிறீர்கள். ஆனால் பிளஸ் 2 வகுப்பில் நான் குறைவான மதிப்பெண்கள் எடுத்து விடுவேனோ என்று பயமாக உள்ளது. உங்களை நான் கஷ்டப்படுத்த விரும்பவில்லை. அதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். அப்பாவை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என உருக்கமாக எழுதியிருந்தார். இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.